தகவல் பரிமாற்றம் படாமல்,உணர்வுகள் பரிமாற்ற பட்டதன் விளைவு.
ஆடம்பரமாய் இருந்து அத்தியாவசமானது வரை உன் வளர்ச்சி,
அரசனையும் அடிமை ஆக்கிய அரசன் நீ ,
கைகளில் ஆறாம் விரலாய்,
முகவரியில் கடைசி நிழலாய்,
காதலர்களின் காதில் காதோர கம்மலாய்,
தொலை தூரத்தில் இருந்த நீ வந்ததால்,அருகில் இருப்பவர்கள் கூட தொலைவாக தெரிந்தார்கள்.
தூக்கத்திலும் நம்முடன் தூங்காமல் இருக்கும் தொலைதூர நண்பன் தான் இந்த கைபேசி...
தூரத்தில் இருப்பவர்களிடம் நிறைகளை மட்டும் பார்க்கும் மனமும்,
அருகில் இருந்தால் குறைகளை மட்டுமே பார்க்கும் குணமும் கொண்டதால் தான் என்னவோ....!
தொலை தூரத்தில் உள்ளவர்களை எண்களால் அழைத்த நாம்,
அருகில் இருப்பவர்களை கண்களால் கூட அழைக்கவில்லை.
காலையில் "அம்மா" என்று உச்சரிக்க கூட மறக்கிறான்,
ஆனால் "ஹலோ" என்று உச்சரிக்க மறக்கவில்லை.
கைக்குழந்தை அழுதால் குழந்தையிடம் பேசும் தாயை விட,
கைபேசி அழைத்தவுடன் பேசும் தாய் தான் அதிகம்.
தகவல் பரிமாற்றம் படாமல்,உணர்வுகள் பரிமாற்ற பட்டதன் விளைவு தான்.
உணர்வுகளின் மதிப்பு குறைந்தது,அதனால் சுவாரஸ்யமும் குறைந்தது.
தகவல் பரிமாற்றம் செய்யும் ஊடகம் தான் கைபேசி.
உணர்வுகள் பரிமாற்றம் செய்யும் ஊடகம் தான் மனிதன்.
வாழ்க்கையில் கைபேசியை தொலைத்தவர்கள் சிலர்.
கைபேசியால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் .
அலைவரிசையின் கைவரிசையால் இருந்து மீளுமா மானுட வாழ்க்கை...?
-----சுப்பிரமணியன் அழகுமலை.
மாற்றத்தால் மாற்றப்பட்டேன் .
நீ இயற்கையின் படைப்பு அல்ல ,
நீ மனிதனின் படைப்பு .
ஒவ்வொரு மனிதனின் ஆசையும் உன்னை தஞ்சமாக்குவது தான் .
நான் உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்,
பிரிவோம் என்றும் தெரிந்தும் காதல் கொண்டேன்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
நிரந்தரமற்ற வாழ்வில் நரந்தர முகவரியை
வாடகை வாழ்வில் வாடகை வீடே.
மாற்றத்தால் மாற்றப்பட்டேன் .
மாற்றத்தால் மாற்றபட்டது வீடு மட்டுமல்ல,என் மனமும் தான்.
தை பிறந்தால் வலி பிறக்கும்,
தை பிறந்தால் வழி பிறக்கும்.